அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த வகுத்து மலை அடிவாரம் கீழக்கரையில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ 44 கோடியே 6 லட்சம் மதிப்பில், தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என சட்டமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மைதான கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிகிறது. இந்தப் பணிகள் நடைபெறுவதை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது,
இந்ததிட்ட பணிகள் இந்த ஆண்டு முடிவில் நிறைவு பெறும் . தொடர்ந்து 4வது முறையாக வந்து இந்த மைதானத்தை பார்த்து ஆய்வு செய்யப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஜல்லிக்கட்டு கலாச்சாரம் – இந்த மைதானத்தில் 35 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு, நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை அமைப்பது, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலை தொட்டி, காளைகள் தங்கும் இடம்,வீரர்கள் ஓய்வு எடுக்கும் கூடம், பார்வையாளர் மடம்,உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் வீரர்களுக்கு, மருத்துவ வசதி, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி, தனித்தனியே ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஜல்லிக்கட்டு மைதானத்தை இணைக்கும் வகையில் புதிதாக சாலை, பாலம் அமைக்க ரூ22கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்று இந்த மைதானம் முதலமைச்சர் உத்திரவிற்கு பின்னர் திறக்கப்படும் தமிழகத்தின் வீர விளையாட்டை , கலாச்சாரங்களை அடையாள படுத்தவே இந்த விளையாட்டு மைதானம் அமைகிறது.
தமிழக அரசு செயல்பாடுகளை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் பழைய பாரம்பரியம் மாறாமல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியா புரம் ஜல்லிக்கட்டு விழாக்கள் வழக்கம் போல் நடை பெறும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜா, கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர்கள் ராதா, முத்துக்குமாரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ்பாபு, சாலை ஆய்வாளர் பாஸ்கரன், அலங்காநல்லூர் யூனியன் ஆணையாளர் பாண்டியன், இன்ஜினியர் துரைக்கண்ணு, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.