சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.
‘ஏழாவது ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி வரும், 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடக்கவுள்ளது. போட்டியில், இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோப்பை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த 19ம் தேதி சென்னையில் துவங்கி, பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நேற்று கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. கோப்பையை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் வரவேற்று அறிமுகப்படுத்தினர். தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சுகுணா பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அறிமுக நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, தமிழ்நாடு ஹாக்கி சங்க பொது செயலாளர் செந்தில் ராஜ் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகு குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சுகுணா பள்ளி கொண்டு வரப்பட்ட கோப்பை பின்னர் கே.சி.டி., வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.