மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்.
சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்
சீனா வில் நடைபெற்ற ஆசியன் கேம்ஸ் 2023 மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று சொந்த ஊரான சோனப்பேட்டை கிராமத்திற்கு வந்த பிரவீன் சித்திரவேலுக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷோ நகரில் நடைபெற்றது இப்போட்டிகளில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கல என மொத்தம் 74 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.
இப்போட்டிகளில் தடகளத்தில் டிரிபிள் ஜம்ப் பிரிவின் இறுதி சுற்று போட்டியில் , 17. 13 மீட்டர் தாண்டி சீன வீரர் தங்கப்பதக்கத்தையும், 16. 93 மீட்டர் தாண்டி மற்றொரு சீன வீரர் வெள்ளி பத்தகத்தையும், 16.68 மீட்டர் தாண்டி இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சோனாப்பேட்டை கிராமத்தில் பெரியார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை சித்ரவேல் கபடி வீரர் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது தாய் பிரேமா மற்றும் பிரவீனா என்ற சகோதரியும் வேல் பிரியன் என்ற தம்பியும் உள்ளனர்.
பிரவீன் சிறு வயது முதலே தடகளத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். சொந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த இவருக்கு அப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்த மதியழகன் என்பவர் தான் உற்சாகமளித்து பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
தங்களது கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் பிரவீன் சித்திரவேல் ஆசிய விளையாட்டு போட்டியில் 16.68 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்றுள்ள தகவல் கிராம மக்களிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சொந்த ஊரான சோனாப்பேட்டை கிராமத்திற்கு வருகை தந்த பிரவீனுக்கு அப்பகுதி கிராம பொதுமக்கள் கோவில் வெண்ணி என்ற இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்..