புதுக்குறள்!

நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

8-A, வேளாளர் தெரு, பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.
பக்கங்கள் :112, விலை: ரூ.75.


   நூல் ஆசிரியர் கவிஞர் பெரணமல்லூர் சேக்ரன் அவர்கள் திருக்குறளை ஆழ்ந்து உணர்ந்து ஆய்ந்து படித்த காரணத்தால் புதுக்குறள் முதல் தொகுப்பில் 118 தலைப்பில் எழுதி உள்ளார். இரண்டாம் தொகுப்பான இந்நூலில் 119 முதல் 201 வரை தலைப்பிட்டு புதுக்குறள் வடித்துள்ளார்.

   தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக விளங்குகின்றது.

நூல் ஆசிரியர் கவிஞர் பெரணமல்லூர் சேக்ரன் அவர்கள் அதிகார வர்க்கம் என்று தொடங்கி வேலை நிறுத்தம் என்ற தலைப்பு வரை புதுக்குறள் வடித்துள்ளார்.

   உலகில் தமிழ்மொழியை அறியாதவர்களும் அறிந்த ஒன்று திருக்குறள்.  மாமனிதர் அப்துல்கலாமின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது திருக்குறள்.  காந்தியடிகளை அகிம்சை வழிக்கு ஈர்த்தது திருக்குறள்.  உலகப்பொதுமறையான திருக்குறள் வடிவில் ஏழு சீர் மூலம் புதுக்குறள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

   முதல் தலைப்பு

   அதிகார வர்க்கம் !

   உழைக்கும் வர்க்க நலனே மூச்சாய்
   அதிகார வர்க்கம் கொள்க!

ஒவ்வொரு தலைப்பில் 10 புதுக்குறள்கள் வடித்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.

   திருக்குறள் 1330-ம் எல்லோருக்கும் எளிதாக புரிந்து விடும் என்று சொல்ல முடியாது.  தமிழறிஞர்களுக்குப் புரியும்.  மற்றவர்களுக்கு தெளிவுரை படித்தாலே விளங்கும்.  ஆனால் இந்த புதுக்குறள் மிக மிக எளிமையாக இருப்பதால் தெளிவுரை இன்றியே அனைவருக்கும் விளங்கும். 

இன்று பலருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்துள்ளது. இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் இந்த அளவையே விசாரித்து அறிந்து கொள்கின்றனர். அழுத்தம் பற்றி அழுத்தமாக வடித்த புதுக்குறள்கள் நன்று.

   உயர்அலுவலர் திட்டி விட்டால் மன அழுத்தம் ஏற்பட்டு அவற்றை வீட்டில், குடும்பத்தில் காட்டி துன்பம் அடையும் பலர் உண்டு.  அவர்களுக்கான புதுக்குறள் இதோ.

   அலுவலர் அழுத்தம் எளிதாய்க் கொண்டால்
   உடல்நலக் கேடு வாரா!

   ஒரு மனிதன் வாழ்வில் சாதிக்க வெற்றி பெற, புகழ் பெற துணை நிற்பது ஆளுமைப்பண்பு.  வெற்றி பெற்ற மாமனிதர்கள் எல்லாம் சிறந்த ஆளுமையுடன் வாழ்ந்தவர்கள்.

   ஆளுமை!

   அடக்கி ஆளுதல் ஆளுமை அன்று
   அன்பின் ஆட்கொளல் நன்று.

   உண்மை தான், இன்று அதிகாரத்தால் சாதிப்பதை விட அன்பால் சாதிப்பதே சாத்தியம். அதிகாரம் செலுத்தினால் இன்று    யாரும் விரும்புவதில்லை.

   இணையத்தின் பயன் அளப்பறியது. முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ள நண்பருக்கு மடல் அனுப்பினால் சென்று சேர 15 தினங்கள் ஆகும்.  அவர் பதில் அனுப்பினால் வந்து சேர 15 தினங்கள் ஆகும்.  இப்படி ஒரு மாத காலத்தில் நடந்த தகவல் பரிமாற்றத்தை மின்னஞ்சல் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் சில நொடிகளில் மடல் அனுப்பி பதில் மடல் பெறும் விந்தை சாத்தியமானது இணையத்தால் தான்.  எனது கவிதைகளை பல இலட்சம் பேர் படிக்கக் காரணமாக இருந்தது இணையம்.  இணையம் பற்றி 10 புதுக்குறள் வடித்து உள்ளார். அவற்றில் ஒன்று இதோ!

   இணையம் மானுடன் கண்ட வளர்ச்சி
   இணையம் பயன்படுக நன்மைக்கே!

   இணையம் என்பது தீ போன்றது.  தீயை விளக்கு ஏற்றவும் பயன்படுத்தலாம்.  அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தலாம்.  விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான இணையத்தை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தினால் நலம் பயக்கும்.

   உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம்.  இரவில் தூங்குவது பொருத்தம்  ஆனால் இன்று இரவுப்பணி காரணமாக பகலில் தூங்குகின்றனர்.  இரவு போல பகலில் தூக்கம் வருவதில்லை.  தூக்கமின்மையே பல நோய்களுக்கு காரணி என்று ஆய்வுகள் சொல்கின்றன.  தூக்கத்தின் அவசியம் உணர்த்தும் புதுக்குறள் நன்று.

   உறக்கம் !

   ஓரெட்டு மணிநேர உறக்கம் வேண்டும்
   மூவெட்டு மணியில் யாண்டும்.

   24 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியம்.  சிலர் பெருமையாக நான் 5 மணி நேரம் தான் தூங்குகிறேன் என்பார்கள்.  அவர்கள் வாழ்நாளை அவர்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள்.  இப்படி பல்வேறு சிந்தனைகளை விதைத்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் பெரணமல்லூர் சேகரன்.

   புதுக்குறளில் அவரையும் அறியாமல் திருவள்ளுவர் ஆட்கொண்ட காரணத்தால் திருக்குறள் வரிகள் அப்படியே வந்து விழுந்துள்ளதைக் காண முடிகின்றது.

   ஒற்றுமை!

   ஒற்றுமை ஒழித்து வேற்றுமை பேசல்
   கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

   கைப்பேசி இல்லாதவர் இல்லை எனுமளவிற்கு பரவலாக எல்லோரிடமும் வந்து விட்டது.  குறிப்பாக இளைஞர்களிடம் நவீன கைபேசி வந்து விட்டது.  ஆனால் அவற்றை நல்லதிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற மன உறுதி இளைஞர்களுக்கு வர வேண்டும்.  குறிப்பாக திரைப்படத்தில், தொலைக்காட்சித் தொடர்களில் கைபேசியை தவறாகப் பயன்படுத்தி குற்றம் இழைத்து கொலை வரை செல்லும் அவலங்களை படம் பிடித்துக் காட்டி வருகின்றனர்.  இளைஞர்களுக்கு மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம் இருக்க வேண்டும்.

   கைப்பேசி!

   கைப்பேசி கொணரும் புதுமைகள் மனிதம்
   மெய்யாக மேம்படப் பேணுக!

   உண்மை தான், கைப்பேசியை மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள் என்கிறார்.

   இன்று இளைஞர்களை பிடித்துள்ள பெரிய நோய் குடி நோய்.  குடித்து சீரழிந்து வருகின்றனர்.

   மது !

   ஆறறிவு ஐந்தறிவாய் ஆகும்நிலை மதுவால்
   ஆறறிவு மதுவை விலக்கு!

   திருவள்ளுவர் போலவே அறநெறி, ஒழுக்கம் கற்பிக்கும் விதமாக புதுக்குறள் வடித்த நூலாசிரியர் கவிஞர் பெரணமல்லூர் சேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். 

இந்த நூலிற்கு அணிந்துரை எழுதியதோடு நின்று விடாமல் விமர்சனத்திற்கு எனக்கும் நூலை தந்து உதவிய தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு நன்றி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *