எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவார பதிகம் தாங்கிய செப்பேடுகள் சுத்தம் செய்து படி எடுத்து ஆய்வு பணி தற்போது தொடக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.இக் கோவிலில் கும்பாபிஷேக பணிக்காக கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நந்தவனத்தில் பள்ளம் தோண்டிய போது 23 ஐம்பொன் சுவாமி சிலைகள் மற்றும் 492 தேவார பதிகம் பதியப்பட்ட செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு அவை கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வருவாய்த்துறை மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் முதல் கட்டமாக 112 செப்பேடுகளை சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து வருவாய் துறையினர் முன்னிலையில் வெளியில் எடுத்து ரசாயனம் கொண்டு சுத்தம் செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர்.
இதே போல் அனைத்து செப்பேடுகளையும் சுத்தம் செய்து பின்னர் செப்பேடுகளில் தகவல் படி எடுத்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் பத்து நாட்கள் இந்த பணி நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
செப்பேடுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை வருவதை அறிந்த தமிழ் சங்கத்தினர் அதிகாரியிடம் ஆய்வுகள் முடித்த பின்னர் செப்பேடுகளை கோவிலிலே வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.