என் வாக்கு – என் உரிமை – என் வாக்கு விற்பனைக்கு அல்ல – பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள் வசிக்கும் வீதிகளில் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவகோட்டை – தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்டனர்.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.
மாணவி கனிஸ்கா ,லெட்சுமி,நந்தனா ,ஜெயஸ்ரீ ஆகியோர் ஓட்டுக்கு பணம் கொடுத்த தூக்கிப் போடுங்க என்கிற விழிப்புணர்வு பாடலை பாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
"பணத்திற்காக நீயும்தானே ஓட்டளிக்காதே,நீயும் வித்துப்புட்டு பிறகுதானே தெருவில் நிற்காதே" என்று வரும் பாடல் வரிகளுடன் விலையில்லா ஓட்டுரிமையை நீங்கள் விற்காதீர் என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவர்கள் தீபா,கார்த்திக் ஆகியோர் ராகத்துடன் பாடினார்கள்.
நாடகம் வாயிலாக , நாங்கள் ஓட்டை நோட்டுக்கு போடமாட்டோம் , நாட்டு நன்மைக்குத்தான் போடுவோம் என்பதை வெளிப்படுத்தி ,உங்கள் விரலின் மை எல்லாக்கரையையும் போக்கட்டும் என்றும்,வாக்கை விற்பனை செய்தவரின் நிலையை விளக்கும் வகையில் நாடகங்களை மாணவர்கள் யோகப்பிரியா,கனிஸ்கா,முகல்யா,கார்த்திக்,ரித்திகா,சாதனஸ்ரீ,தனலெட்சுமி ,கவிஷா ஆகியோர் நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வாக்குரிமை என்பது நமது வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்து விடாமல் இருக்க அழகான கவிதையை கூறி அசத்தினார்கள் மாணவி ஏஞ்சல் ஜாய் , ரித்திகா,.
பாடல் மூலம் தேர்தல் விழிப்புணர்வை மாணவர்கள் சபரீஸ்வரன்,சபரி வர்ஷன்,சுஜன்,விஜய்கண்ணன் ஆகியோர் விளக்கினார்.
ஆசிரியைகள் முத்துமீனாள் ,ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.வருவாய் ஆய்வாளர் மாலதி , கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு பார்த்து ரசித்தனர்.