இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்தில் முதல்கட்டமாக நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களை வாக்களிக்க செய்யும் வகையில் கல்லூரிகளில் பல நிகழ்ச்சிகள் நடந்தது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை நேற்று ஆர்வமாக பதிவு செய்தனர். முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளியூர்களில் படிப்பவர்கள் வேலைபார்ப்பவர்கள் என்று அனைவரும் சொந்த ஊருக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.
அதன்படி கும்பகோணத்திலும் வெளியூர்களில் வேலை மற்றும் படிப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். ஒரு சிலர்கள் தங்களுடைய குடும்ப சூழ்நிலையால் மற்றும் பொருளாதார நிலையால் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வேலைபார்த்து வருகின்றனர்.
ஆனால் அவர்களால் தங்கள் வாக்குகளை செலுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில்
தஞ்சை மாவட்ட கும்பகோணத்த்தில் பந்தநல்லூர் பகுதியில் பூர்விகமாக கொண்ட மென்பொருள் என்ஜினீயரும் ஆடுதுறை பகுதியை பூர்விகமாக கொண்ட என்ஜினியரும் என 2 பேர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வாக்களிக்க முடியாமல் இருப்பர்வகள் மத்தியில் இவர்கள் 2 பேரும் பல ஆயிரம் செலவு செய்து தங்கள் சொந்த ஊரில் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். இதுகுறித்து பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் கூறுகையில், நான் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.
இதில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் தொடர்ந்து வாக்களிக்க வந்து கொண்டிருக்கிறேன். எனது குடியுரிமை முக்கியம் என்பதால் இந்திய குடியுரிமையை நீக்காமல் அமெரிக்க குடியுரிமை பெறாமல் உள்ளேன். எனது வாக்கு ஒரு வாக்கு தான். இதன் மூலம் எந்த ஒரு பெரிய மாற்றமும் வரப்போவதில்லை இருந்தாலும் வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை என்பதை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நான் தமிழகத்தில் நடக்கக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்கு செலுத்த வந்து விடுகிறேன்.
ஆடுதுறை வண்டிக்கார தெரு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தாக் கூறுகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு வந்தேன். 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது சமூக வலைதளங்களில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வோடு நின்று விடாமல் செயலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முன் உதாரணமாக நமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கடந்த ஆறு மாதம் முன்பாகவே நான் தேர்தலில் வந்து வாக்களிப்பதற்கு முடிவு செய்து தயார் நிலையில் இருந்தேன்.
இந்திய தேர்தல் ஆணையமும் 100 சதம் வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது எனக்கு ஒரு ஊன்றுகோளாக இருந்தது. அனைவரும் வாக்களித்துவிட்டு தான் உரிமையோடு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைகளை கேட்க முடியும். எனவே அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என தெரிவித்தார்.