பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு வசித்து வருபவர் ஜெகதீசன் (42). பால்வியாபாரம் செய்துவரும் இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

அதே ஊரில் வசித்து வருபவர்  ஜெகதீசனின் சித்தப்பா மகன் ராம்குமார் (35). இவர் ஜெகதீசனின் அக்கா மகளை திருமணம் செய்து உள்ளதாக தெரிகிறது. 

ஜெகதீசன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவருக்கும் இடையே  குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  அதிகாலை வழக்கம் போல ஜெகதீசன் பால் வியாபரத்திற்கு சென்றார். 

ஆயக்குடியில் இருந்து சட்டப்பாறை செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியே வந்த ராம்குமார் ஜெகதீசனை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.

 இதில் கை, கால் மற்றும் வயிறு இடுப்பு ஆகிய பகுதிகளில் படுகாயம் அடைந்த ஜெகதீசன் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார்.

 அவ்வழியே சென்ற பொதுமக்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெகதீசனை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆயக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகதீசனை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெகதீசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய ராம்குமாரை தேடி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக பால் வியாபாரியை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *