தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் உற்சாக வரவேற்பு….
நாளை வைகையில் எழுந்தருள்கிறார்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை 6.25 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர்கம்பு ஏந்தி, சகல பரிவாரங்களுடன் தங்க பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பாக வையாழி ஆன பின்னர் அதிர் வேட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்பட்டார்.
புறப்பட்டது முதல் 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.
இன்று காலை மூன்று மாவடி பகுதியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்னமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக் கொண்டு இரவு 11.30 மணிக்கு வைகை ஆற்றிற்கு புறப்படுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக்காண மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். .