கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் அழகு குத்தி,பூவோடு சட்டி மற்றும் சக்தி கரகம் எடுத்து ஆடிப் பாடி ஒப்பணக்கார வீதி வழியாக அம்மனை அழைத்துச் சென்றனர்.
கோவையின் காவல் தெய்வம் என போற்றப்படும் அவினாசி சாலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு சட்டி மற்றும் சக்தி கரகம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வரும் நாட்களில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் நீர்,சக்தி கரகம்,அக்னி தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி என வரும் 28ஆம் தேதியுடன் தண்டுமாரியம்மன் சித்திரை திருவிழா முடிவடைகிறது. தண்டுமாரியம்மன் திருக்கோவிலின் அறங்காவல நிர்வாகிகள் அறங்காவலர் குழு தலைவர் சு.நாகலெட்சுமி அறங்காவலர்கள் ரா.கலைமணி,ஜெ.மனோஜ்குமார், பா.ஸ்ரீவத்சன்,எஸ்.பத்ரசாமி மற்றும் செயல் அலுவலர் பேபி ஷாலினி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.