புதுச்சேரியில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு நாட்காட்டியை(காலண்டரை) முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்காட்டி (காலண்டர்) மற்றும் நாட்குறிப்பு (டைரி) வெளியிடப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அரசு சார்பில் நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி வெயியிடப்படவில்லை.காகிதம் இல்லாத நிர்வாகத்தின் அடிப்படையில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி டைரி வெளியிட தடை விதித்தார்.அதைத் தொடர்ந்து புதுச்சேரியில் டைரி மற்றும் காலண்டர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் பெயரில் காலண்டர் அச்சடிக்கும் பணி நடைபெற்றது. 3 ஆண்டுக்கு பிறகு காலண்டர் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள், ஏ.கே.டி. ஆறுமுகம், பி.ஆர்.சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். காலண்டர் முகப்பில் புதிய மேரி கட்டிடம், ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காமராஜர் மணி மண்டபம், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கார்டன், திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்தி , காரைக்கால் பெரிய பள்ளிவாசல், பாரதி பூங்கா வர்த்தக சபை, புதுச்சேரி கடலில் படகு சவாரி, மஸ்கராத் நடனம், திருநள்ளாறு ஆன்மீகப் பூங்கா, மாகி கடற்கரை பகுதி, ஏனாம் அம்பேத்கர் விஞ்ஞான் பவன், சித்தேரி படுகை அணை, கப்ஸ் கோயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் பெரும்பாலான படங்களை புதுச்சேரி புகைப்பட கலைஞர் அருண் எடுத்துள்ளார். இந்த காலண்டர் அனைத்தும் ஒரே நாளில் புதுச்சேரி அரசின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.