தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் காவல் துறை செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 43 பேர், போக்சோ வழக்குகளில் ஈடுபட்டவர்கள் 14 பேர் உட்பட 270 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 593 வழக்குளில் 417 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 700 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 5,38,89,654- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் போதை பொருள் தடுப்பு குற்றத்தில் 182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 74,16,740- மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா ஆயில் உட்பட 696 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் 234 நபர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதிலிருந்த ரூபாய் 3,68,801/-ம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 1116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 90,02,038/- மதிப்புள்ள 10,180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வழக்குகளில் 3768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3810 எதிரிகள் கைது செய்யப்பட்டு 8442 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 3,47485- பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்ததில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 70,540- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்குகளில் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 369 எதிரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 3,23,558- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 120 எதிரிகள் கைது செய்யப்பட்டு 108 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் இந்த ஆண்டு 20 வழக்குகள் பதிவு செய்தும், மனு விசாரணையிலும் ரூபாய் 3,00,00,000- மதிப்புள்ள 17.80 ஏக்கர் மோசடி செய்யப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 92 வழக்குகள் பதிவு செய்தும், 1878 மனுக்கள் மீது விசாரணை செய்தும், 1386 இணையதள புகார்கள் மீதும் விசாரணை செய்தும் பணம் ரூபாய் 34,97,500/- மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன 680 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மோசடி செய்யப்பட்ட பணம் ரூபாய் 1,36,31,258/- முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 77 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 211 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 68 கொலை வழக்குகள் நண்பர்கள் அவர்களுக்குள் பழக்கத்தில் ஏற்படும் வார்த்தை வித்தியாசத்தில் திடீரென உணர்ச்சி வசப்பட்டு நடந்த கொலைகள் மற்றும் குடும்பத்தகராறில் ஏற்பட்ட கொலைகள் தான்.
மேலும் கொலையை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் 105 பேர் கைது செய்யப்பட்டும், 49 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 543 பேரிடம் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டு, அதனை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 718 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் 1456பேர் மீது நடவடிக்கை குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி மோதல்கள், வன்முறை, பழிக்குப்பழி வாங்கும் கொலை ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு (3 Tier Rowdysm Monitoring System) பின்பற்றப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கொலை குற்றங்கள் நடவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ‘மாற்றத்தை தேடி” என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2425 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, அதில் கலந்து கொண்ட 71,995 நபர்களிடம் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் எனவும், சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருப்போம் எனவும் உறுதி மொழி எடுத்து, அதற்கென பாராமரிக்கப்படும் பதிவேடுகளில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் என்பதுடன் பொதுமக்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பாலாஜி சரவணன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.