மார்கழி மாதம் முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சன்னதி தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சம்பத், சமூக ஆர்வலர் சுப்பராயலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமார் பங்கேற்று, மார்கழி மாதத்தில் குழந்தைகளின் ஆன்மீக பங்களிப்பையும், குழந்தைகள் எவ்வாறு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என்பது பற்றியும், மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளை பட்டியலிட்டும் பேசினார். மேலும்
இந்த நிகழ்வில் திருப்பதி தேவஸ்தான திருப்பாவை சொற்பொழிவாளர் கோவிந்தராஜன் ராமானுஜதாசர் பங்கேற்று திருப்பாவை செயல்பாடுகளை வாழ்த்துரையாக வழங்கினார். மாணவ-மாணவிகளின் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்று, அனைவருக்கும் பரிசுகளும், நோட்டுப் புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மார்கழி மாத நாட்டியாஞ்சலி மற்றும் கோலாட்டம் நிகழ்வுகள் நடைபெற்றது. மாம்பட்டு கலைச் சுடர்மணி பார்த்திபனின் ஆன்மீக பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓட்டல் சங்க பொறுப்பாளர் நடராஜன், யுரேகா கல்வி திட்ட மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதியஉணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் பஜனை கோயில் நிர்வாகி பரந்தாம ராமானுஜ தாசர் நன்றி கூறினார்.