2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் விநியோகம் ஜனவரி 9முதல் தொடங்கப்படவுள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் தகவல்.
தமிழர்த்திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2023-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000- ரொக்கப்பணம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகம் ஜனவரி 9 முதல் தொடங்கப்படவுள்ளது.
நாளொன்றுக்கு கிராம புறங்களில் 200 குடும்ப அட்டைகளுக்கும் நகர்புறங்களில் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளது. முன்னதாகவே டோக்கன்கள் வழங்கப்படும். மேற்படி டோக்கன்களில் பொங்கல் பரிசு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் ஜனவரி 3முதல் 8ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் 2023-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பொருட்கள் பெறுவதில் புகார்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0451-2460097 என்ற எண்ணிற்கும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் அலுவலக வேலை நாளில் வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் கேட்டுக்கொண்டுள்ளார்.