நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடிவடைந்த நிலையில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அங்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
அதே நேரத்தில் சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள கருப்பசாமி கோவில் ஆகிய 2 கோவில்களிலும் அதேபோல் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாகவும் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 கோவில்களிலும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பணம் திருட்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுத்தமல்லி பாரதி நகரில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் நகைகள் கொள்ளை போன நிலையில், தற்போது அடுத்தடுத்து 3 கோவில்களில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.