தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனரும் சைக்கிள் வீரருமான அறிவழகன் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு அரை வட்ட அளவில் மட்டும் பெடல் மிதித்து சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இன்றைய சூழலில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளினால் மனித உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தவும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை யொட்டி மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர் அறிவழகன் என்பவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து துடியலூர் வரை 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். சாதாரணமாக சைக்கிள் ஓட்டும் முறையை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 கிலோ எடையுன் அரை வட்ட வடிவில் மட்டும் பெடல் செய்து வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.. அங்கிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் புறப்பட்டு மேட்டுப்பாளையம் கோவை சாலை வழியாக துடியலூரில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.