புதுப்பட்டினம், பிப்.24
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் தமிழ் மொழி, பழங்கலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழன்னை புலனக்குழு சார்பில் கடப்பாக்கம் அடுத்த வெண்ணாங்குப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் அழகாகவும் பிழையின்றியும் எழுதும் போட்டி 12 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இதில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை 108 மாணவர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் பிழையின்றி அழகாக எழுதிய 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று 24 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் இராம பத்திரன் தலைமையில் நடைபெற்றது.
கணித ஆசிரியரும் தமிழ்ப் பற்றாளருமான உலகநாதன் மற்றும் தமிழாசிரியர்கள் உமா, மேனகா, பொன்னியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழன்னை புலனக்குழு நிறுவுநரும் அகவை முதிர்ந்த தமிழறிஞருமான அகநம்பி தி பாலசுப்பிரமணியன், புலனக்குழு ஆலோசகர்கள் சீவாடி மூ.சுந்தரமூர்த்தி, கீழார் ஏ. சிவா,கல்வியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முதல் இடம் வெற்றி பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவர்கள் புவனேஸ்வரி, ஸ்ரீ சிவராம் ஆகியோருக்கு சால்வையணிவித்து,பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர். தேர்வு செய்யப்பட்ட 14 மாணவர்களுக்கு பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்