தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் மாணவிகளிடம் உரையாற்றிய அவர் கூறியதாவது:
“கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். பலர் புத்தகங்களில் மூழ்கி உழைக்கிறார்கள். பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்த கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.
கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல; அறிவை வளர்ப்பதற்கானது. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். தூத்துக்குடியில் பெண்களுக்கென மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடலை ஆரோக்கியமாகவும், மனதை தைரியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்க வேண்டும். மரங்கள் நட வேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் வாழ வேண்டும்.
எந்த பதவியில் இருப்பது முக்கியமல்ல; அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. இந்த அறிவை பெற்று, பல பேரை உருவாக்க வேண்டும். முடியாதது எதுவும் இல்லை. முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்.
பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வளர வேண்டும்.”
முன்னதாக, “மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று மேயர் கேட்டபோது, “ப்ராஜெக்ட் செய்வோம்” என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.