திண்டுக்கல் மாவட்டம் தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 14,சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20, உலக குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தினம் நவம்பர் 19, ஆகிய தினங்களை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களிடையே குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Walk for Children “குழந்தைகளுக்கான நடை” என்ற தலைப்பில் பேரணி, 14.11.2025 அன்று உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்.ஜெயசுதா ஆகியோர்களால், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டு,பேரணி துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் துவங்கி அஞ்சலி பைபாஸ் வந்து மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தில் முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்.சத்தியநாராயணன்,மாவட்ட சமூக நல அலுவலர்.கர்லின் செல்வராணி, நன்னடத்தை அலுவலர். ஜோதிமணி, குழந்தைகள் நலக்குழு தலைவர்.தீபக் மற்றும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், சிறப்பு சிறார் காவல் பிரிவு, காவல் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், கல்வித்துறையினர், சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள்,நேரு யுவகேந்திரா, தன்னார்வத் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் உள்ளிட்ட 225க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது மடிப்பேடுகள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பேரணியின் முடிவில் குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உரிமைக்கும் என்னும் தலைப்பில் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைதி அறக்கட்டளை தன்னார்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இப்பேரணியில் கலந்து கொண்டோர்களுக்கு விழிப்புணர்வு தொப்பி,குடி தண்ணீர், தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.