செல்வக்குமார் செய்தியாளர் சீர்காழி
பிரதமர் மோடி குறித்து அவதுராக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர்.
அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் மோடி உருவ பொம்மையை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்து எரிக்க முயன்றனர். அப்பொழுது அங்கு இருந்த காவல்துறையினர் உருவ பொம்மையை பிடுங்கி தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து வேனின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.