புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை லோகமுத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரின் மகள் பத்மபிரியா(25), சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த 10-ந் தேதி இவரின் செல்போனுக்கு அமேசான் சென்டர் பிலிப்பைன்ஸ் கிளை என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அதில், சிறிய தொகையை செலுத்தி விளையாடினால் பணம் இரட்டிபாக தரப்படும் என தெரிவித்தனர். சிறிய தொகை செலுத்தி பத்மபிரியா விளையாடியபோது இரட்டிப்பு பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. இதை நம்பி அதிக பணம் செலுத்தி விளையாடினார்.
ஆனால் இரட்டிப்பு பணம் வரவில்லை. சந்தேகமடைந் பத்மபிரியா மொத்தமாக செலுத்திய ரூ.87 ஆயிரத்தை திருப்பி அனுப்பும்படி கூறினார். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை. அந்த நிறுவனத்திலிருந்து பேசிய நபர் பிலிப்பைன்ஸ் நாட்டின் விதிப்படி ரூ.31 ஆயிரம் செலுத்தினால் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பத்மபிரியா பணம் இல்லை என்றவுடன் அவரின் எண்ணை பிளாக் செய்துவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மபிரியா முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.