எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தாண்டவன்குளத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அப்பகுதியில் விளைநிலங்களுக்கிடையே உள்ள கட்டிடத்தை கடந்த சில நாட்களாக சீரமைத்து வந்துள்ளனர். இதனை அறிந்த தாண்டவன்குளம் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் அரசு மதுபானக் கடை அமையவுள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபான கடை அமைந்தால் சுற்றியுள்ள விளை நிலங்கள் பாதிக்கபடும் எனவும் காலி மதுபாட்டில்கள் நிலத்தில் வீசி உடைவதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கபடுவதாகவும் புகார்தெரிவிக்கின்றனர்.
மேலும் பழையபாளையம்,கொடக்காரமூலை,தாண்டவன்குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வரும் பிரதான இணைப்பு சாலையில் கடை அமைவதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் சென்று வரும் சாலையில் மதுபான கடை அமைந்தால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாம் எனவும் அச்சம் தெரிவித்தனர். எனவே மூன்று கிராமமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி தாண்டவன்குளத்தில் அரசு மதுபான கடை அமைக்க கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.