ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச செவிலியர் தின விழா பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கே.செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டாரத்தில் உள்ள பிள்ளா நல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ராசிபுரம் நகர ஆரம்ப சுகாதார மையங்களைச் சேர்ந்த 38 செவிலியர்கள் விழாவில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கேக் வெட்டி, நினைவு பரிசுகள், இனிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் மாவட்ட சாலை பாதுகாப்பு திட்ட சேர்மன் இ.என்.சுரேந்திரன், முன்னாள் தலைவர் எல் .சிவகுமார் , இணைச் செயலாளர் வி .ஆர். எஸ் .ஆனந்தகுமார், திட்டச் சேர்மன் கண்ணன் 24 – 25 ஆம் ஆண்டு தலைவர் முருகானந்தம், செயலாளர் ஜி.தினகர் ,பொருளாளர் பி.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பில் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், சங்கத்தின் தலைவர் ஆர்.ரவிக்குமார் தலைமை வகித்தார். திட்டச் சேர்மேன் ஏ.ராஜூ வரவேற்றார். செயலர் சி.ஜெயக்குமார், மருத்துவமனை தலைமை மருத்துவர் பி.ஜெயந்தி, கே.கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநர் பி.சரவணன், துணை ஆளுநர் கே.ரவி ஆகியோர் பங்கேற்ற செவிலியர்களுக்கு நினைவு பரிசளித்து, உபகரணங்கள் வழங்கி கெளரவித்தனர்.