எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட ரயில்கள் இவ்வழியே வந்து செல்கின்றன.பழமை வாய்ந்த ரயில் நிலைய பழைய கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலைய கட்டிடம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது
இந்நிலையில் பயன்பாடு இன்றி கைவிடப்பட்ட பழைய ரயில் நிலைய கட்டிடம் தற்போது சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி உள்ளது. பழைய ரயில் நிலைய கட்டிடத்தில் உள்ளே மிகப்பெரிய ஆலமரம் ஒன்று வளர்ந்துள்ளதால் கட்டிடத்தின் ஒரு சில பகுதி இடிந்து விடும் நிலையில் உள்ளது.மரத்தின் அழுத்தத்தால் கட்டிடடம் இடிந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
கட்டிடத்தின் உள்ளே மது,சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் மட்டுமின்றி நள்ளிரவு வரை இப்பகுதியில் சிலர் மது அருந்திவிட்டு செல்கின்றனர்.கட்டிடடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்புகள்,பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது.இதனால் இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வருவோர் அச்சத்துடனே பழைய கட்டிடத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள பழமை வாய்ந்த கொள்ளிடம் ரயில் நிலைய பழைய அலுலலக கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.