எஸ். செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை -விழுப்புரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொள்ளிடத்தில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலை விரிவாக்க பணி களுக்காக சீர்காழி அருகே எடமணல் மற்றும் வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து டாரஸ் லாரிகளில் மண் ஏற்றி சென்று கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு இரவு பகலாக டாரஸ் லாரிகளில் மண் ஏற்றி செல்லும் போது மண் லாரிகளிலிருந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதாலும் பாதுகாப்பற்ற முறையில் மண் ஏற்றி சொல்லப்படுவதாலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சாலை விரிவாக்க பணிக்காக மண் ஏற்றி சென்ற லாரிகளை சீர்காழி கீழ விதி பகுதிகள் பொதுமக்கள் ஒன்று திரண்டு லாரிகளை சிறைபிடித்தனர்.
மண் லாரிகளால் அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்துள்ளதாகவும், லாரிகளில் இருந்து சிதறி கிடக்கும் மணலால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கிக் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் கூறி லாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து சிறைபிடித்த லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.