மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா, செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் அவர்கள் மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை CBCID-க்கு மாற்றப்படுகிறது. இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா,இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திரபாபு, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கி. சங்கர், இ.கா.ப., விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப., வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் என். கண்ணன், இ.கா.ப., விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர்பி. பகலவன், இ.கா.ப., விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நா. ஸ்ரீநாதா, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *