பள்ளிபாளையம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் ஏராளமான நூற்பாலைகளும், பல்வேறு விதமான சிறு குறு தொழில் நிறுவனங்களும் உள்ள பகுதிகளாகும். இந்நிலையில் பல்வேறு தேவைகளுக்காக வெப்படையிலிருந்து ஈரோட்டிற்கு,சேலத்திற்கு பொதுமக்கள் சென்றுவரும் நிலையில், சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்துகளில் வெப்படையில் உள்ள பயணிகளை, பேருந்து நடத்துனர்கள் ஏற்றுவதில்லை என கூறப்படுகிறது.
அப்படி அவர்களை பேருந்தில் ஏற்றினாலும், இருக்கைகள் கொடுக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக தெரிகிறது.. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சேலம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பஸ்ஸில் ஏறிய வெப்படையை சேர்ந்த பஞ்சாலைத் தொழிலாளி ஒருவர், வெப்படை பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி டிக்கெட் கேட்டுள்ளார்.
வெப்படையில் பேருந்து நிற்காது என டிரைவரும் நடத்துனரும் கூறியதால் பஞ்சாலைத் தொழிலாளி ஏன் நிற்காது என பேருந்தில் இருந்த ஓட்டுநர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஞ்சாலை தொழிலாளியை திட்டி கீழே இறக்கி விட்டனர்.. இந்நிலையில் இதுகுறித்து வெப்படையில் உள்ள தனது உறவினர்களிடம் பஞ்சாலை தொழிலாளி தகவல் தெரிவித்த நிலையில், ஈரோட்டில் இருந்து வெப்படை வழியே சேலம் செல்லவிருந்த தனியார் பேருந்தை, வெப்படை நால்ரோடு பகுதியில் தொழிலாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்தனர்.
இதனை அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தனியார் பேருந்துகள் உரிய முறையில் பயணிகளை ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளரிடம் தெரிவித்தனர்.. அவர்கள் இனிவரும் காலங்களில் பேருந்தை முறையாக
இயக்குவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.