பெரம்பலூர்.டிச.05. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 லட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2.00 லட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏதுமில்லை.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவுடு, வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஓவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் அணிகலன் தயாரிப்பு, வீட்டில் தயார் செய்யும் உணவு பொருட்கள், யோக நிலையம், உடற்பயிற்சி நிலையம்,சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெஹந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்துமாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு, தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரீம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும்.
எனவே,இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மைய, பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.