மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில் சாலையோரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து கண்ணு தெரியாத மகனுடன் மழைக் காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள குடிசை வீட்டில் தவித்த தாய்.சமூக வலைதள நண்பர்கள் உதவியுடன் புது வீடு கட்டி கிரகபிரவேஷவிழா நடத்திய சமூக சேவகர் பாரதிமோகனுக்கு கிராமமக்கள் பாராட்டு. கண்ணு தெரியாத ஆரோக்கியராஜா தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ச்சியடைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் இரட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் சாலை ஓரங்களில் கிடக்கும் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பிறவியிலேயே இரண்டு கண்ணும் தெரியாத ஆரோக்கியராஜா என்ற மகனை பாதுகாத்து வளர்த்து வருகிறார். மழைக்காலங்களில் தங்க முடியாத வகையில் இவர்கள் வசிக்கும் குடிசை வீடு இடிந்த நிலையில் கூரையைச் சுற்றி தார்ப்பாய் பிளாஸ்டிக் சீட்டால் மூடி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் சமூக சேவகர் பெரம்பூரை சேர்ந்த பாரதிமோகன் தான் நடத்தும் பாரதிமோகன் அறக்கட்டளை மூலம் சமுக வலைதள நண்பர்கள் உதவியுடன் நிதி திரட்டி 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதிய வீட்டை கட்டி தந்து இன்று கிரகப்பிரவேசம் நடத்தி வைத்தார். இரண்டு கண்களும் தெரியாத ஆரோக்கியராஜா கையால் புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பாரதிமோகன் வீட்டில் படையல் இட்டு பூஜை செய்து குடும்பத்தினரிடம் வீட்டை பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் மழைக்காலங்களில் வசிக்க முடியாத நிலையில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 18 வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், கூறும் பாரதி மோகனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகன் ஆரோக்கியராஜா ஆனந்தக் கண்ணீரோடு நன்றி தெரிவித்தனர். வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு ஆரோக்கியராஜா தன் கையால் உணவு வழங்கி நெகிழ்ச்சியடைந்தார்.