சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் ;-திரளான பக்தர்கள் பங்கேற்பு;-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சனிக்கிழமை காலை சாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 5:30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணியர் திருத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
அப்போது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கோவில் துணை ஆணையர் கோமதி அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, முன்னாள் அதிமுக அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, இந்து முன்னணி நெல்லை கோட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, பாஜக நகரத் தலைவர் கணேசன் பொதுச் செயலாளர்கள் மணிகண்டன், கோமதிநாயகம், திமுக துணைச் செயலாளர் முத்துக்குமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணைச் செயலாளர் கேபிள் கணேசன் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.