தெருநாய்கள் தொல்லை மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக மாக இருக்கிறது. தெருநாய்கள் சாலைகளின் குறுக்கே பாய்வதால் டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவது தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாடிக்கையாக நடந்து வருகிறது. சில நேரங்களில் தெருநாய்களால் விபத்தில் சிக்குபவர்கள் உயிரிழக்கும் பரிதாபமும் நடக்கிறது.
தெரு நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை மாநகராட்சி வழக்கறிஞர் ஆஜராகி, இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய் யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
பின்னர் மதுரை மாநகராட்சியில் எத்தனை கால்நடை டாக்டர்கள் உள்ளனர் என நீதிபதிகள் கேட்டதற்கு, 2 கால்நடை டாக்டர்கள் இருக்கின்றனர் என பதில் அளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை டாக்டர்கள் நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.