திருநெல்வேலியில் வரலாறு காணாத வெப்பம்…
திருநெல்வேலியில் கடுமையான வெப்பம் நிலவிவரும் நிலையில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. தினமும் 100டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர்.
திருநெல்வேலியில் இன்று 100.5டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிக வெப்பம் காரணமாகப் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் வீடுகளில் மின்விசிறிகள், ஏசி, ஏர் கூலர்பயன்பாடு அதிகரித்துள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அனலாக நீடிக்கிறது.
இதனால் பொதுமக்கள் பலரும் இரவில் தூக்கம் இழந்து தவிக்கின்றனர். இதே போல அம்பாசமுத்திரம் பகுதியிலும் 100டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது வழக்கம். ஆனால் கடுமையான வெயிலின் காரணமாகப் பகல் நேரங்களில் அங்கும் அனல் காற்று வீசி வருகிறது. அதே நேரத்தில் சேரன்மகாதேவியிலும் வெப்பநிலை 93.2டிகிரியாக பதிவாகியுள்ளது. மானூரில் 94.1டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.