பெரம்பலூர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அயினாபுரத்தில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கட்டடம், ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டடம் என மொத்தம் ரூ.33.87 லட்சம் மதிப்பீட்டிலான 3 புதிய கட்டடங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை,எளிய மக்கள் நலனில் அக்கறை கொண்டதன் காரணமாக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதியோர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1 கோடியே 1 வது மருந்து பெட்டகத்தினை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இவ்வாறு ஒவ்வொரு சிறப்பான திட்டமும் அறிவித்து செயல்படுத்தி வருவதனால் இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக செயல்பட்டு பிற மாநில முதலமைச்சர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பாலம்பாடி, ஜெமின் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மாக்காய்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் .சிவசங்கர் இந்த கோரிக்கை மனுக்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.
இந்நிகழ்வில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் .கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .முரளிதரன், . இமயவரம்பன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமா ஜெயம், ஒன்றிய பொறியாளர் . சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.