தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார் தீர்மானங்களை வாசித்தார். பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் குறித்த 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பணி நியமன குழு தலைவர் பாலாமணி வார்டு உறுப்பினர்கள் மைதிலி , ராஜேந்திரன், பாண்டி, ஜாகிர் உசேன், தேவகி, கவிதா, மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குறைபாடுகளையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணைத் தலைவர் ராதா ராஜேஷ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராம் தீர்மான நகல்களை வாசித்தார். வார்டு உறுப்பினர்கள் குமரேசன், தேவராஜ் முருகாயி, முத்து காமாட்சி,கைலாசம், லட்சுமணன் , சிட்டம்மாள் , கோமதி மகேஸ்வரி, சாந்தி, அழகுத்தாய் ஆகியோர் கலந்துகொண்டு அந்தந்த வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர். வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சித் தலைவர் நாகராஜ் உறுதி அளித்தார். நிகழ்வின் நிறைவாக இளநிலை உதவியாளர் முருகன் நன்றி உரையாற்றினார்.