C K RAJAN
Cuddalore District Reporter
94884 71235…
கடலூரில்,தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
கடலூர், டவுன்ஹாலில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விபத்தில்லா சாலை போக்குவரத்தினை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக சாலை விதிகள் குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜனவரி 1, 2026 முதல் ஜனவரி 31, 2026 வரை “தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்-2026”
என அறிவிக்கப்பட்டு சாலைப்பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படை யில் இன்றைய தினம் தேசிய மாணவர் படை மற்றும் கல்லூரி மாணவர்கள், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறை பங்கேற்புடன் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மஞ்சக்குப்பம் டவுன் ஹால் முதல் கே.வி.டெக்ஸ் வரை நடைப்பெற்றது.
இப்பேரணியில் ”தலைக்கவசம் உயிர் கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பை தவிர்ப்பீர், உரிமம் வாங்க எட்டு போடு! உயிரை காக்க ஹெல்மேட் போடு, ஹெல்மேட் அணிவது பாதுகாப்பு – இதுவே உனது உயிர்காப்பு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, சாலையில் பேசாதே கைபேசி- எமன் வருவான் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், போதையில் பயணம்- பாதையில் மரணம், சாலையில் போதை- மரணத்தின் பாதை, மிதவேகம் மிக நன்று, சேமிக்க நினைத்தது சில நொடிகள் சேதமடைந்த பல உயிர்கள், மிதமான வாகனப் பயணம் மீதமாகும் வாழ்க்கைப்பயணம், வேகம் விவேகம் அல்ல, சாலையில் முந்தாதே வாழ்க்கையில் முந்து, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதே, சீட்பெல்ட் அணிவது பாதுகாப்பு இதுவே பயணத்தின் உயிர்காப்பு, இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, அதிக சுமை ஏற்றாதீர் ஆபத்தில் சிக்கித் தவிக்காதீர், அதிக பாரம் ஆபத்தில் முடியும், படியில் பயணம் நொடியில் மரணம், ஓடும் பேருந்தில் ஏறாதே உயிரை பணயம் வைக்காதே, சிவப்பு விளக்கை மதித்திடு இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு, சாலை ஞானம் வளர்ப்போம் சாலை விபத்தைம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனத்தை முந்தாதீர், ஆம்பூலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு, மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே, அதிக சப்தம் எழுப்பாதே மானிட ஆயுளை குறைக்காதே, சாலையில் சாகசங்கள் வேண்டாமே, வளைவில் முந்தாதே வாழ்க்கையை குறைக்காதே, வாகனத்தில் வரும் புகை வாழ்க்கைக்கு பெரும் பகை, சாலை விதிகளை பின்பற்று விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கு” போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து கடைப்பிடித்து இம்மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடலூர் ஆனந்த், நெய்வேலி, பண்ருட்டி பிரான்சிஸ், விருதாச்சலம் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.