எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரக் கற்றல் மையம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சமு இந்து மேல்நிலைப் பள்ளியில் சென்னை ஃபோர்டெஸ் நிறுவன நிதியுதவியில் செயல்படவுள்ள மாலை நேரக் கற்றல் மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சேவாலயா தொண்டு நிறுவனம் இம் மையத்தை செயல்படுத்தி நடத்தும்.
ஃபோர்டெஸ் நிறுவன செயலாளர் மற்றும் டி சி எஸ் நிறுவன முன்னாள் ஈ வி பி, பி ஆர் கிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் சவிதா கிருஷ்ணன் மற்றும் தங்கம் வெங்கடேசன், டி சி எஸ் நிறுவன டெலிவரி எக்ஸலென்ஸ் துறை முன்னாள் தலைவர் கே. சுப்ரமணியன் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
சீர்காழி, ச.மு.இந்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவர்கள், ஆசிரியர்கள், சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காலவர், திருவாடுதுறை ஆதீனத்தின் சிறந்த சமூக சேவகர் விருது பெற்ற வா. முரளிதரன் மற்றும் சேவாலயா பணியாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
மையத்தை திறந்து வைத்து பேசுகையில், கிருஷ்ணன் அவர்கள், “‘அனைவருக்கும் ஐ ஐ டி’ என்ற திட்டத்தின் மூலம் ஐ ஐ டி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அவர்கள் ஏழை மாணவர்களுக்கும் ஐ ஐ டி தரத்தில் கல்வி சென்றடைய வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். இக்கல்வி நகரங்களில் வசிக்கும் வசதியானவர்களுக்கு மட்டுமல்ல. கிராமங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுடன் உரையாடி, அவர்கள் எதிர்கால சாத்தியங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஊக்கமூட்டினர்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் சேவாலயாவின் 45 மாலை நேரக் கற்றல் மையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. ஐ ஐ டி மெட்ராஸ் ப்ரவர்த்தக் நிறுவனத்தின் கல்வி சக்தி முன்னெடுப்பின் மூலம், ஸ்மார்ட்போர்டுகள் உதவியுடன் ஏழை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப வகுப்புகள் இம்மையங்களில் நடைபெறுகின்றன. இதில் ஒரு அங்கமாக இதில் ஒரு அங்கமாக சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒரு மையம் துவங்கப்பட்டது.
முன்னதாக, தலைமை ஆசிரியர் எஸ் முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வ முரளிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளியின் முதுகலை மூத்த ஆசிரியர் நன்றி உரை கூறுகையில் 1988 முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சேவாலயா, தென்னிந்தியா முழுவதும் 60 மையங்கள் மூலம், ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராம இளைஞர்களுக்கான தொழிற்கல்வி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்கள், கோசாலைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளில் இலவச சேவை செய்து வருகிறது. 37 ஆண்டுகளில் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது என்று மூத்த முதுகலை ஆசிரியர் வி முருகபாண்டியன் நன்றி கூறினார்.