புதுச்சேரியில் பேனர் கட் அவுட்டுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சமூக அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பேனர்-கட் அவுட்டுகள் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் பேனர் கட் அவுட் வைக்க தடை சட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் பேனர் கட் அவுட்டுகள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரியும் சமூக அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
போராட்டத்திற்கு புதுச்சேரி இயற்கை மற்றும் கலாசார புரட்சி இயக்க தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா தலைமை தாங்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், நாம் தமிழர் தொழிலாளர் சங்க செயலாளர் ரமேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், அண்ணா பேரவை அமைப்பாளர் சிவ.இளங்கோ உள்படபத்துக்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் ராஜீவ் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை போலீசார் வழுதாவூர் சாலையில் தடுத்து நிறுத்தினார்கள். தலையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஐம்பதுக்கு மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து கோரிமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.