புதுச்சேரி:பிப்.15-புதுச்சேரி யில் தங்கும் விடுதி, ஸ்பாக்களில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் அவ்வப்போது விபசாரம் வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் சுற்றுலா பயணிகள் போர்வையில் விபசாரம் நடப்பதால் அதை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இந்தநிலையில் அண்ணா சாலையில் உள்ள ஸ்பா ஒன்றில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபாசாரம் நடப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து ஸ்பாவை நடத்திய அரியாங்குப்பத்தை சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்த ஒரு பெண்ணை மீட்டனர்.
இதேபோல் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் பாரதி வீதியில் உள்ள ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய காஞ்சீபுரம் ஆலந்தூரை சேர்ந்த சந்திரகுமார் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டனர். செங்குந்தர் வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண்ணை மீட்டனர். அவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய லோகநாதன், நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் தற்போது காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்