திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 24 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு.ரமணன், செயலாளர் பிரியா ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் என்.கலைவாணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் 725 இளநிலை மாணவிகள் மற்றும் 100 முதுநிலை மாணவிகள் உள்பட 825 மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் இன்றைய சூழலில் பெண்களுக்கு கல்வி ஒன்றே வாழ்க்கையின் வழிகாட்டி என்று வலியுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 4 மாணவிகளின் அனைத்து கல்வி கட்டணத்தையும் காசோலையாக அவர்களிடம் வழங்கப்பட்டது. இறுதியில் பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.