செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், குன்றத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 198 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுமார் 1 டன் எடையுள்ள கஞ்சா சேகரிக்கப்பட்டது.
சிங்கபெருமாள் கோவில் அடுத்துள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள GJ MULTI CAVE என்ற தனியார் நிறுவனத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாம்பரம் கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு குழுவினர் முன்னிலையில் இந்த கஞ்சா மூட்டைகள் அனைத்தும் நவீன உலைகளில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
தமிழக அரசு போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான கஞ்சா பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சாலை உலையில் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையின் போது முக்கிய காவல் அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்
தமிழக முதலமைச்சரின் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை இதுபோன்று சட்டப்பூர்வமாக அழிப்பதன் மூலம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காவல் துறை தொடர்ந்து பாடுபட்டு வருகிறது குறிப்பிட தக்கது