கோவை
கோவை நகரில் உள்ள பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான கார்மல் கார்டன் பள்ளியில் நடைபெற்ற மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவில் பள்ளி குழந்தைகள் உற்சாகமாக பட்டங்களை பெற்றுச் சென்றனர்.
கோவை புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஆண்டுதோறும் மழலையர் வகுப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சி ஆர் ஜி பள்ளியின் முதல்வர் சரவணகுமார் கலந்து கொண்டு 70க்கும் மேற்பட்ட மழலையர் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினார். மழலையர் வகுப்பை வெற்றிகரமாக முடித்த குழந்தைகள் பட்டமளிப்பு உடை அணிந்து மேடையில் வந்து மகிழ்ச்சியுடன் பட்டங்களை பெற்றனர்.அந்த தருணத்தை பெற்றோர்கள் உற்சாக கைத்தட்டலுடன் வரவேற்றனர்.
குழந்தைகளின் திறமையை பாராட்டிய பள்ளி நிர்வாகம், அவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் மேலும் முன்னேற வேண்டும் என்று ஊக்கமளித்தது.தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் உரையாற்றிய பள்ளியின் தாளாளர், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார். சிறு வயதிலிருந்தே நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் மற்றும் கல்வி மீது ஆர்வம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர். இந்த பட்டமளிப்பு விழா குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மறக்க முடியாத இனிய நிகழ்வாக அமைந்தது.