புதுச்சேரி சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது: திருக்குறள் நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு அற்புத நூலாகும். 14 ஐரோப்பிய மொழிகள், 10 ஆசிய மொழிகள், 14 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு உன்னத நூல். மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் இந்த திருக்குறள் பொதுமறை. வள்ளுவனை பெற்றதால், புகழ் வையகம் பெற்றது.அவருக்கு சிறப்பு செய்யும் வண்ணம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த தீர்மானத்தை வரவேற்று எதிர்கட்சி தலைவர் சிவா, நாஜிம், செந்தில்குமார், நாக.தியாகராஜன், நேரு, சிவசங்கர், ராமலிங்கம், வெங்க டேசன்,ரிச்சர்டு, ஜான்குமார் ஆகியோர் பேசினர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசும்போது, மனிதன் செம்மையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால், திருக்குறளை படித்து அதன் கருத்துக்களை ஏற்றால் போதும். திருக்குறளில் இல்லாததே இல்லை. 2 வரியில் அனைத்து கருத்துக்களும் அடங்கியுள்ளது. இதை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பலாம் என தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனிபால் கென்னடியிடம் தனிநபர் தீர்மானத்தை வாபஸ் பெற கேட்டுக்கொண்டார். இதையேற்று தீர்மானத்தை வாபஸ் பெற்றார். தொடர்ந்த திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.