.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலையில் ஏற்பாடு. தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மரியாதைக்குரிய தளபதியார் அவர்கள் தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்பு நடவடிக்கையாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் வகையில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை தமிழர் திருநாளான பொங்கள் பண்டிகையின்போது நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிச்சுவடின்படி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், கிராமப்புற கலைகள் கிராமிய இசை இவற்றையெல்லாம் பாரதிதாசன் பிறந்த புதுவை தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் அறியும் வண்ணம் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், புதுவை சங்கமம் கலைவிழா தொடங்கப்பட்டு அவ்விழாவுடன் சேர்த்து சமத்துவப் பொங்கல் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.
கழக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் முத்து, பொதுச் செயலாளர் சீனு. மோகன்தாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, புதுச்சேரி கண்மணி கிரியேஷன் அமைப்பின் தலைவரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான எம். எஸ். ராஜா, தமிழ்ச்சங்கப் பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைச் செயலர் அருள்செல்வம், புதுச்சேரி மாநில தமிழ்க் கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் பாவலர் ஆறுசெல்வம், திமுக தொகுதி செயலாளர்கள் ராஜா என்கிற தியாகராஜன், சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்கள்.
கூட்டத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, தமிழர் பண்பாட்டை பறைசாற்றுகின்ற வகையில் சனவரி 14–ஆம் தேதி காலை 07.00 மணியளவில் பாகூர் தொகுதி பாகூர் நகரத்தில் (மூலநாதர் சுவாமி கோவில் அருகில்) 300 பெண்கள் பங்கேற்கும் சமத்துவப் பொங்கல் விழாவோடு, புதுவை சங்கமம் கலைவிழாவை சிறப்பாக கொண்டாடுவது.
விழாவில், புதுச்சேரி மண்ணின் இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, கரகாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்துவது. மண்மணக்கும் கிராமிய இசையை தமிழர்களுக்கு அர்பணிக்கும் விதமாக கிராமிய இசைக்கலைஞர் சினிமா பாடகள் திரு. சித்தன் ஜெயமூர்த்தி தலைமையிலான குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துவது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளரும், பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. செந்தில்குமார் தலைமையில் புதுவை சங்கமம் கலைவிழா குழுவினர் இணைந்து செயல்படுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.