புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- தமிழக அமைச்சரவையில் இருக்கும் 25 சதவீத அமைச்சர்கள் ஜெயலலிதாவால் பதவி சுகம் அனுபவித்த பின் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து சென்றவர்கள். அதில் ஒருவர்தான் அமைச்சர் ராமச்சந்திரன். முதலில் அமைச்சர் ராமச்சந்திரன் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும்.
தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து மக்கள் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்து வரும் ஜெயலலிதா பற்றி யார் தரம் தாழ்ந்து பேசினாலும் எதிர் வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழக அமைச்சர்கள் தாங்கள் துறை சார்ந்த பணிகளை பாராமல் தங்கள் தலைமையை குளிர்விக்க பல்வேறு விஷயங்களை சர்ச்சையாக பேசி வருவது தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்- அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் ஜெயலலிதாவை மரியாதையாக அம்மையார் என்றே அழைப்பார்கள். ஜெயலலிதாவால் அரசியலில் அடையாளம் காட்டப்பட சிலர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசுவது ஏற்று கொள்ளதக்கதல்ல. எனவே அமைச்சர் ராமச்சந்திரன் உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.
தனது அமைச்சர்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட வேண்டும். இல்லாவிட்டால் புதுவைக்கு தமிழக அமைச்சர்கள் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.