ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார் ஜூன் மாதம் முதல் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் காலை உணவுது திட்டம் வழங்கப்படுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, அவர்கள் மூலமே காலை உணவு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவி மாணவிகளுக்கும் காலை உணவு திட்டம் வழங்குவது மிக பொருத்தமானதாகும். எனவே ஜூன் மாதம் முதல் தொடங்கப்படும் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஒராண்டாக ஊதங வழங்கப்படாமல் உள்ளது மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இந்த துப்புரவு பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையின்றி முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட சான்றுகளின் உண்மைத் தன்மை வழங்கப்படாததால் ஆசிரியர்களின் தேர்வு நிலை சிறப்பு நிலை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே ஆசிரியர்களின் கல்வி சான்றுகளுக்கான உண்மைத் தன்மைகளை விரைந்து வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் சிறப்பு முகாம் அமைத்து அனைவருக்கும் பணிவரன் முறை உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து தர வேண்டும். ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தால் உரிய பலன்கள் கிடைக்காமல் அவசர உதவிக்கு திண்டாட வேண்டி உள்ளது. இதில் அரசு அலட்சியம் காட்டாமல் நிதித்துறை, காப்பீட்டு துறை, அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களுடன் இணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தி அவசரகால உதவிக்கு பயன்படும் வகையில் புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டம் முழுமையாக வெற்றி அடையும் வகையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற பழைய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 300 மாணவர்களுக்கு மேல் கல்வி பயிலும் நடுநிலைப்பள்ளிகளில் எழுத்தர் பணியிடம் உருவாக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதுபோல் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளையும் பணி மூப்பு அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் வலியுறுத்தப்படும் தகுதி தேர்வு என்ற முறையை தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.
இதனை அரசு கொள்கை முடிவாக ஏற்று அறிவிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் ஏராளமாக காலியிடமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக பணி மூப்பு அடிப்படையில் பதிவு உயர்வு வழங்கி கல்வி நலனை பாதுகாக்க வேண்டும். ஆசிரியர்களின் கலந்தாய்வுக்கு புதிய அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வெளியிட உள்ள அட்டவணையில் ஏற்கனவே இருந்த குறைபாடுகளை நீக்கி நடைமுறைக்கு ஏற்ற வகையில் அட்டவணை மற்றும் செயல்முறைகளை வெளியிட வேண்டும் கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்