மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவிக்கையில்:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் தமிழக பகுதிகளிலே தமிழர்களின் பாரம்பரியமான, பண்பாட்டு அடையாளமாக திகழ்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக உலக தரத்தில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கிறது. 77683 சதுர அடியில் விளையாட்டு அரங்கம் அமைய இருக்கிறது.

இதில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரார்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என சிறப்பான முறையில் அரங்கம் அமைய இருக்கிறது. குறிப்பாக நுழைவாயில் வளைவு, காளைகள் சிற்பக்கூடம், உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை அமைய இருக்கிறது.

18.03.2023 அன்று பணிகள் தொடங்கப்பட்டு 9 மாத காலத்தில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அரங்கப் பணிகள் தென்னக மக்கள் பாராட்டுகின்ற அளவிற்கு சிறப்பான முறையில் அமையும். மைதானத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங்கும்.அதேபோல தனிச்சியம் அலங்காநல்லூர் சாலையிலிருந்து ஜல்லிக்கட்டு அரங்கு சாலையை இணைக்க சுமார் 3.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.22 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டிற்கு காளைகளை ஏற்றிக்கொண்டு அதிகளவு வாகனங்கள் வருமென்பதால் 10 மீட்டர் அகல சாலை அமைக்கப்படவுள்ளது என பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), வெங்கடேசன் (சோழவந்தான்), முதன்மை தலைமைப் பொறியாளர் சத்திய மூர்த்தி , தலைமை பொறியாளர் மதுரை மண்டலம் ரகுநாதன் கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாசலம் , செயற்பொறியாளர் செந்தூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *