புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் மடுகரையில் கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ராஜவேலு தேரை வடை பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று இறுதியாக அழுகளம் என்ற பகுதியை அடைந்தது. அங்கு அரவான் என்னும் கூத்தாண்டவர் பலியானதாக ஐதீகம். அதனால் நேற்று முன்தினம் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து கை வளையல்களை உடைத்து, தலையில் சூடி இருந்த பூக்களை வீசி எறிந்தனர் மேலும் ஒப்பாரி வைத்து அழுதனர். முன்னதாக நேற்றுமுன்தினம் முக்கிய விழாவான முத்துப்பல்லக்கு உட்பட ஐந்து சுவாமிகள் வீதியுலா நடந்தது. அப்போது நையாண்டிமேளம், திரைஇசை பாட்டுக்கச்சேரி மற்றும் மார்டன் ட்ரசில் திருநங்கைகள் நடனமும் நிகழ்ந்தது. திருவிழா கடைகள் நிறைந்து காணப்பட்டது. அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் பெண்போலீசார் உட்பட 30-க்கும் அதிகமான போலீசார் 16 கண்காணிப்பு கேமரா நேரடி பார்வையில் பந்தோபஸ்த்து பணியில் ஈடுபட்டனர். நாளை தீ மிதித் திருவிழா நடக்கிறது. இதில் முன்னாள் முதல்வரும், தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் பங்கேற்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவல்
குழுவினரும், மடுகரை கிராமவாசிகளும் செய்தனர்.