(வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி)
புதுச்சேரி சுகாதாரத்துறையின் ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, சுகாதாரத்துறைச் செயலாளர் உதயகுமார், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, தலைமை மருந்தக அதிகாரி ரமேஷ், இணை இயக்குனர் அனந்தலட்சுமி, அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் செல்வா, ராஜுவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோதி பாப்லி ஜேம்ஸ் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறையின் மேம்பாடு குறித்தும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரியில், இணைய மருத்துவமனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டம், தொழில்நுட்பத் தேவைகள், பாரதப் பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டச் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
துணைநிலை ஆளுநர் பின்வரும் ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
• அரசு மருத்துவமனைகளில் உள்ள அவசர ஊர்தி (Ambulance) ஓட்டுநர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
• ஜூலை மாத இறுதிக்குள் கிராமப்புறங்களில் “மருத்துவ முகாம்கள்“ (Health Mela) நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• தொலை மருத்துவம் (Tele-Medicine) தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுகக வே்ண்டும். அதற்கான மருத்தவமனையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
• இ.எஸ்.ஐ மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
• சிறப்பாக பணிபுரியும் மருத்துவர்களை உற்சாகமூட்டும் வகையில் கௌரவிக்க வேண்டும்.