நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல இது மனித இனத்தையே அழித்துவிடும் என ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலா பொடியை சிங்கப்பூர் அரசு தடை செய்தது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்
நமது அரிசியில் ஆர்சனிக் கலந்துள்ளது, நமது மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லிகள் கலந்துள்ளன ,தொழில்மயமாக்கப்பட்ட விவசாயத்தின் பாதிப்பை நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம்முடைய மண் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றை நாம் பாதுகாக்க வேண்டியது எத்தனை அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நமது விவசாயிகளை நாம் மதிக்கவில்லை எனில், நமது மண்ணையும், மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரிகளையும் நாம் பாதுகாக்கவில்லையெனில், ஏரிகள் மற்றும் குளங்களை பாதுகாக்கவில்லை எனில் நாமே அழிந்து போவோம், மனித இனமே அழிந்து போகும்” என ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய பதிவில் வேதனை தெரிவித்துள்ளார். நமக்காக உணவினை உற்பத்தி செய்து வழங்கும் கைகளை நாம் மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய தருணம் இது என சுட்டிக் காட்டியுள்ள ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் தற்போது அதிகளவிலான கருவுறுதல் மருத்துவமனைகள் அதிகரித்து வருவது குறித்தும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏரிகளையும் , குளங்களையும் பாதுகாக்காமல் மேலும் மேலும் அவற்றை அழிப்பது எதிர்காலத்தில் பல பிரச்னைகளை உண்டாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன்கறி மசாலாவில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தான எத்தைல் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்மையில் ஹாங்காங் உணவு கட்டுப்பாட்டு நிறுவனமும், எம்.ஹெச்.டி நிறுவனத்தின் மசாலா பொடிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கூறி ஹாங்காங் அரசு அவற்றுக்கு தடை விதித்தது, எத்தைல் ஆக்சைடு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானது அல்ல, இது புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டவை என ஹாங்காங் அரசு கூறியுள்ளது.