கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிறுதோரும் கூடும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தையாக விளங்கி வருகிறது. தக்காளி முதல் தங்கம் வரை விற்கப்படும் இந்த வாரச்சந்தை, பேருந்து நிலையம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் சந்தை சுருங்கி காணப்படுகிறது.
இந்நிலையில் சந்தை வளாகத்திற்குள் வணிக கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டி விட்டு செல்வதால் குப்பை கூடரமாக காட்சியளிக்கிறது. போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்த வாரச்சந்தையை தூய்மைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகமோ, ஊராட்சி நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்நிலையில் வாரச்சந்தைக்குள் குவியும் குப்பைகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துவிடுவதால், தீ மளமளவென சந்தை வளாகம் முழுவதும் பரவி, புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. புகை முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் பரவுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
சந்தைக்கு பின்புறம் உள்ள வடமலம்பட்டி கிராமத்தில் புகை பரவுவதால், அங்கு குடியிருப்பு வாசிகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலா அவர்களிடம் கேட்டபோது, போச்சம்பள்ள ஊராட்சி செயலாளர் முத்து அவர்களை நேரில் பார்வையிடச்சொல்லி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்